திருமதி இந்துமதி ஆரோக்கியராஜ், M.Sc., M.Phil., SET
தலைமை செயல் அதிகாரி (CEO) & நிறுவனர்
வணக்கம், நான் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மங்கநல்லூர் என்ற சிறிய கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் ஏழு சகோதரிகளுடன் பிறந்த கடைகுட்டி பெண். வறுமையில் வளர்ந்தாலும் கலைமகளின் அருள் பெற்ற குடும்பத்தில் ஒருத்தியாக என்னை பிறக்க வைத்த ஈசனை வணங்கி என் அறிமுகத்தை தொடர்கிறேன். படிப்பும், ஒழுக்கமும் என் தாய் தந்தை எனக்கு கொடுத்த சொத்து. படிப்பில் பள்ளியில் முதல் மாணவி, கல்லூரியில் பல்கலைகழக தர வரிசை பட்டியல் பெற்ற பெண் என்று உங்களை போலவே சாதாரணமாகவே தொடங்கியது என் இளமை பருவம். 2014 முதல் 2022 வரை கல்லூரியில் கணித விரிவுரையாளராக இருந்து வந்து, திருமணம் என்ற அழகான பந்தத்தினால் கணவன், குழந்தை என்று என் உறவுகளுக்காக என் கனவை கனத்த மனதோடு துறந்த சாதாரண ஒரு குடும்பத் தலைவி நான். இருப்பினும் வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலம் போட்டி தேர்வு வகுப்பிற்கு பயிற்சி வழங்கி அதன் மூலம் வரும் வருமானத்தில் பயணித்து வந்தேன். எட்டு வருடங்களாக என் வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு படிப்போடு சேர்த்து வாழ்க்கை பாடத்தை சொல்லி கொடுத்த அனுபவம் இன்று மகிழ்வித்து மகிழ் என்ற குழுவை நிர்வகிக்கும் திறமையை எனக்கு வழங்கியது என்று கூறினால் மிகை ஆகாது.
கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் உலகத்திற்குள் வருமானம் தேடிய பலருள் நானும் ஒருத்தி. நான் தேடிய அழகான உலகம் கிடைக்காத காரணத்தால் நானே எனக்கு என உலகம் படைக்க ஆசை கொண்டு தொடங்கியது இந்த பயணம். மகிழ்வித்து மகிழ் குழுவால் பெற்ற தன் வெற்றியை கண்ணீரோடு பரிமாறும் பெண்களின் குரலை கேட்கும் போது தான் உணர்ந்தேன், இந்த பயணத்தை தொடங்கியது நான் அல்ல, என்னை வழிநடத்தும் எம்பெருமான் ஈசன் என்று.அதன் பிறகே உணர்ந்தேன் என் பொறுப்புகளை. வடிவமைத்தேன் என் மகிழ்வித்து மகிழ் குழுவை. மிகவும் பொறுப்போடும், கவனத்தோடும் .ஆன்லைன் உலகமே என்றாலும் தனக்கென தனி அடையாளத்தோடு திகழ தினம் தினம் உருக்கிக் கொண்டேன் என்னை. என் குரலாலும், என் எழுத்தாலும் என்னவர்களின் வடிவத்தை இன்னும் அழகாக்கினேன்
சிலரை வடிவமைக்க மிகவும் எளிதானது.. என் படிப்பை எண்ணி மகிழ்ந்தேன்... சிலரை வடிவமைக்க கடினம் ஆனது.. சில நேரம் புத்தகம் உதவியது... சில நேரம் என் ஈசன் உதவினார் என் வழிபாட்டில் நான் படித்த கல்வியை விடவும், நான்படித்த புத்தங்களை விடவும், என் ஈசன் காட்டிய மனிதர்கள் பல வாழக்கை பாடத்தை கற்றுகொடுத்தனர் மகிழ்ந்தேன் சில நேரம், வலி பொறுத்தேன் பல நேரம். என் வழியை அழகாக மாற்ற நான் செய்த அத்தனை முயற்சிகளும் பல சவால்களை சந்தித்தன.இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தாலும் பிறந்த குழந்தை போலவே உணர்ந்தோம் நானும் என் ஏணிகள், விழுதுகள் நண்பர்களும்.முயற்சியை விடாமல் அழகாக வடிவமைக்க கூட்டம் கூட்டமாக உக்கார்ந்து பேசினோம். வேண்டாதவற்றை விலகினோம். வேண்டியதை தூசி தட்டினோம்.தேடி தேடி வழி கண்டோம். கண்ட பிறகே அறிந்தோம்.. அதுவே நாங்கள் எங்கள் வாழ்வில் இத்தனை நாளாக தேடிக்கொண்டு இருந்த பொக்கிஷம் என்று. பிழைகள் பல செய்து, தோல்விகள் பல சந்தித்து, அவமானங்கள் பல கண்டு பெற்று எடுத்தோம். மகிழ்வித்து மகிழ் என்ற எங்கள் அன்பு மகளை. பெற்று எடுத்த மகளை கரை சேர்க்கவே என் நாட்களை சமர்பிக்கிறேன்